Friday, October 3, 2014

இப்படியும் சில மனிதர்கள்: உணவகத்தில் மோசமான கவனிப்பிற்கு பில்லை விட அதிகமான டிப்ஸ்..!


அமெரிக்காவை சேர்ந்த மெக்சைன் என்பவர் தனது மனைவியுடன் உணவு விடுதிக்கு சென்றுள்ளார். சர்வரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்துள்ளார்கள். 20 நிமிடம் கழித்து தண்ணீர் மட்டும் சர்வர் வைத்துள்ளார். மீண்டும் 40 நிமிடங்கள் கழித்து ஆர்டர் கொடுத்ததை சர்வர் எடுத்து வந்துள்ளார்.

உணவருந்தி வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.அங்கு உணவருந்த வந்த அனைவருக்கும் இதே நிலைமைதான். இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் முடிவெடுத்த தம்பதியினர் அந்த சர்வருக்கு டிப்ஸ் அளிப்பது என முடிவெடுத்து அவருக்கு உணவுக்கான பில் 66 டாலரோடு அதற்கு மேலாக‌ 100 டாலரை டிப்ஸாக வழங்கி சர்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

தாமதத்திற்கு காரணம் சர்வர் அல்ல‌ உணவகத்தில் பணியாளர் பற்றாக்குறைதான். மொத்தம் 12 டேபிள்கள் அவர் ஒரு சர்வர்தான் இத்தனை டேபிளையும் கவனிப்பது சிரமம்தான் எனவே இப்படி ஒரு முடிவு எடுத்தோம் என்று மெக்சைன் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அவரின் பேஸ்புக் பக்கத்தில் லட்சக்கணக்கானோர் ஆதரவும் பாராட்டும் குவிந்த வண்ணம் உள்ளது. 

‘திருமணத்தில் தொடங்கிய கொடுமை கொலையில் முடிந்துவிட்டதே’ - அம்மா கதறல்

‘திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை கொடுமைப்படுத்தி, இப்போது கொலையும் செய்துவிட்டனரே’ என்று தாய் புஷ்பலதா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தாய் கதறல் கொலை செய்யப்பட்ட ஜெயசுவாசினியின் தாய் புஷ்பலதா, தந்தை சண்முகம், சகோதரர் மோகன்ராம் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயசுவாசினியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். அப்போது புஷ்பலதா கூறியதாவது:– ஏராளமான நகைகளை வரதட்சணையாக கொடுத்து கடந்த 2007–ம் ஆண்டு ஒரே ஆசை மகளை திருமணம் செய்து வைத்தோம். கோவை அவினாசிரோட்டில் உள்ள பெரிய மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் இந்த திருமணத்துக்கு வந்து இருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் இருந்தே எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அனைத்து பொருட்களையும் நாங்களே வாங்கி கொடுத்தோம். இரட்டைக்குழந்தை பிறந்த பின்னர் மகளை திரும்ப அனுப்பி வைக்கலாம் என்று கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, ‘ஜாதகம் சரியில்லை. இப்போது வர வேண்டாம்’ என்று தொடர்ந்து நாள் கடத்தி வந்தனர். குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு இப்போது கொலையும் செய்துவிட்டனர். திருமணத்தில் தொடங்கிய கொடுமை, கொலையில் முடிந்து ஒரே மகளை இழந்துவிட்டேன். எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைபோல் வேறு எந்த பெண்ணுக்கும் இனி நடக்க கூடாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புஷ்பலதா கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெயசுவாசினியின் சகோதரர் மோகன்ராம் கூறியதாவது:– கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தியதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினோம். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2007–ம் ஆண்டு ரெனால்டு கம்பெனி கார் பிரசித்தி பெற்று இருப்பதாகவும், கோவையின் சாலையில் முதன்முதலில் இந்த காரை ஓட்ட விரும்புவதாகவும், அந்த காரை வாங்கி தருமாறும் சந்தோஷ்குமார் கேட்டார். எங்கள் அக்காள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் செலவில் அந்த காரையும் வாங்கி கொடுத்தோம். ஜட்டி முதல் அனைத்தையும் கணவர் வீட்டினருக்கு வாங்கி கொடுத்தும், எங்களது குடும்ப குல விளக்கை கொன்றுவிட்டனர் என்று அண்ணன் மோகன் ராம் கண்ணீர் வடித்தபடி கூறினார்.

Thursday, October 2, 2014

விஷன் தமிழ்நாடு 2023 ஆப்ஸ் அறிமுகம்..!


தமிழ்நாட்டின் வளர்ச்சியை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் தொலைநோக்குத் திட்டம் “விஷன் தமிழ்நாடு 2023”. போக்குவரத்து, விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 11 துறைகளிலும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் அதிகமாகப் பயனடைய விருக்கும் இளைஞர்களுக்காக அருண்தத்தன் என்ற பொறியியல் மற்றும் சட்ட பட்டதாரி இளைஞர் விஷன் 2023 பற்றிய தகவல்களை செல்போனில் காணும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த அப்ளிகேஷன் அனைத்துத் திட்டங்களையும் துறைவாரியாகப் பிரித்து, விரிவான புள்ளிவிவரங்களுடன், படிப்பதற்கு எளிமையான முறையில் விளக்குகிறது.

இவர் விழுப்புரம் மாவட்டம், எய்யில் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த அப்ளிகேஷனை “விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பற்றி இன்றைய இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அது இளைஞர்களைச் சென்றடைவதற்காகவே செல்போனில் பார்க்கும்படியான இந்த அப்ளிகேஷனாக உருவாக்கி யிருக்கிறேன்” என்கிறார் இவர்.

போனில் விளையாடுவதற்கும் பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கும் நடுவே இந்த நலத் திட்டத்தைப் பற்றியும் இளைஞர்கள் தெரிந்துகொள்ளலாம். விஷன் தமிழ்நாடு 2023 திட்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த 11 ஆண்டுகளில் இரண்டு கோடிப் பேருக்குப் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. தனிநபர் சாராசரி ஆண்டு வருமானத்தை

2023ல் 6 மடங்காக உயர்த்தி 4,50,000 ரூபாய் என்ற இலக்கை அடையத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. “தற்போது ஆண்ட்ராய்ட் போன்களுக்கு உருவாக்கப்பட்ட அப்பிளிகேஷனை விரைவில் விண்டோஸ், ஐ போன்களுக்கும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்கிறார் அருண்.

விஷன் தமிழ்நாடு 2023 பற்றிய சமீபத்திய செய்திகளையும், திட்டங்களின் தற்போதைய நிலவரங்களையும் இந்த அப்ளிகேஷனில் காணலாம்.

யான் (2014) - திரைவிமர்சனம்

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார் துளசி. அவளை சாதுர்யமாக காப்பாற்றுகிறார் ஜீவா. அதோடு அவளை ஒருதலையாக காதலிக்கவும் செய்கிறார்.

அதன்பின்னர் அவள் பின்னாலேயே சுற்றி வரும் ஜீவா, ஒருநாள் துளசி தனது அப்பா நாசருடன் காரில் போய்க் கொண்டிருக்கும்போது அவளிடம் தனது காதலை சொல்லி விடுகிறார். இதனால் கோபமடையும் நாசர் தன்னை வந்து சந்திக்குமாறு ஜீவாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

நாசரை சந்திக்கும் ஜீவாவுக்கு எந்த வேலைவெட்டியும் இல்லை என்பதை அறிந்ததும், மேலும் கோபமடைந்த நாசர் ஜீவாவை தகாத வார்த்தைகளால் திட்டி விடுகிறார். இதனால் மனமுடைந்த ஜீவா, எப்படியாவது ஒரு வேலையை தேடிக் கொள்ளவேண்டும் என்று கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்குகிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை.

இறுதியில், டிராவல் ஏஜென்ட் வெங்கட் போஸ் மூலம் வெளிநாடு செல்ல திட்டமிடுகிறார். வெங்கட் போஸ் மூலம் கஜகஸ்தான் செல்கிறார் ஜீவா. அங்கு ஜீவாவுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. கஜகஸ்தான் ஏர்ப்போட்டில் ஜீவாவின் உடமைகளை பரிசோதிக்கும் அந்நாட்டு போலீசார், அவரது சூட்கேசில் போதை மருந்து இருப்பதை கண்டறிகின்றனர். இதனால் ஜீவாவை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.

கஜகஸ்தானில் போதை மருந்து கடத்தினால் தலையை துண்டிப்பதுதான் தண்டனையாகும். அதனால் ஜீவாவுக்கும் தலையை துண்டிக்குமாறு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிறையில் தம்பி ராமையாவின் அறிமுகம் கிடைக்கிறது ஜீவாவுக்கு. சக கைதியான தம்பிராமையா இவர் சென்ற சில நாட்களுக்குள் விடுதலையாகி வெளியே வருகிறார். அவரிடம் தனது நிலைமையை மும்பையில் உள்ள தனது குடும்பத்தாரிடம் சொல்லி தன்னை எப்படியாவது மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறார் ஜீவா.

தம்பி ராமையாவும் மும்பைக்கு சென்று ஜீவாவின் குடும்பத்தாரிடம் அவரது நிலைமையை எடுத்துக் கூறுகிறார். இதையறிந்த துளசி, தன்னால்தான் ஜீவாவுக்கு இந்த நிலைமை ஆனது என்று மனமுடைந்து போகிறார். தானே அங்கு சென்று அவனை மீட்டு வருவேன் என்று சபதமேற்று கஜகஸ்தான் புறப்பட்டுச் செல்கிறாள்.

இறுதியில், துளசி, ஜீவாவை மீட்டு இந்தியா திரும்பினாளா? அவனுடன் ஒன்று சேர்ந்தாளா? என்பதே மீதிக்கதை.

ஜீவா இப்படத்தில் கூடுதல் மெருகேறியிருக்கிறார். பார்க்க அழகாக இருப்பது மட்டுமின்றி நடிப்பிலும் கடினமான உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அவரது நடிப்புக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இந்த படத்துக்காக இவர் இவ்வளவு காலம் காத்திருந்தது வீண் போகவில்லை. சண்டைக் காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

துளசி திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். படத்தில் கதையின் தேவைக்கேற்ப கவர்ச்சி காட்டி, நடிப்பிலும் மிளிர்கிறார். தனது இரண்டாவது படத்திலேயே இவ்வளவு அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுகிறார்.

துளசியின் அப்பாவாக வரும் நாசர் பாசமுள்ள அப்பாவாக மனதில் பதிகிறார். ஜெயப்பிரகாஷ் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நம் கண்ணில் நிற்கிறார். தீவிரவாதியாக வரும் நவாப் ஷாவின் நடிப்பும் பலே. தம்பி ராமையா, கருணாகரன், வெங்கட் போஸ் ஆகியோர் ஒருசில காட்சிகளே வந்தாலும், அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்து நம்மை கவர்ந்திழுக்கிறார்கள்.

புதுமையான கதையுடன் இயக்குனராக களமிறங்கியிருக்கும் ரவி.கே.சந்திரனுக்கு பாராட்டுக்கள். படத்தின் கதைக்கு தகுந்தாற்போல் லொக்கேஷன்களை தேர்வு செய்வதில் வென்றிருக்கிறார். கதையோட்டத்தில் படம் ரசிக்க வைத்தாலும், ரசிகர்களை கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்கள் படத்தில் இல்லாதது படத்திற்கு சற்று பலவீனம்தான். அவற்றை பின்வரும் படங்களில் ரவி.கே.சந்திரன் பின்பற்றுவார் என நம்புவோம். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு அபாரம். பாடல் காட்சிகளுக்கு கூடுதல் கவனம் கொடுத்திருக்கிறார். அது திரையில் அழகாக பளிச்சிடுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையால் படத்திற்கு இன்னும் கொஞ்சம் பலம் கூட்டியிருக்கலாம். ஏனோ, இவரது பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களிலும் ஒன்றிரண்டு பாடல்களை தவிர, வேறு பாடல்கள் ரசிகர்களை முணுமுணுக்க வைக்காதது சற்று வருத்தமே.

மொத்தத்தில் ‘யான்’ சுறுசுறுப்பில்லை

அதிக நேரம் தூங்குவது நல்லதா..? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்..!


அதிக நேரம் தூங்குவது சில நேரம் நல்லது தான் என்றாலும் கூட, அது அதிகரிக்கையில் நம் உடலில் மோசமான பக்க விளைவுகளை உண்டாக்கி விடும். அதிகமாக தூங்கினால் உடலில் சோம்பல் ஏற்படும்.

இதனால் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் கண்களுக்கு கீழ் கனத்த வீக்கங்கள் ஏற்படும். அளவுக்கு அதிகமாக தூங்குவது இதயத்திற்கு நல்லதல்ல. அதற்கு காரணம் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் இருப்பதாலே. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அளவுக்கு அதிகமாக நீங்கள் தூங்குவதை கடைப்பிடிக்க கூடாது.

சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் இதய நோய்களே அதிகமாக தூங்குவதற்கு காரணமாக உள்ளது. நீங்கள் அளவுக்கு அதிகமாக தூங்கும் போது, உங்கள் உடல் ஒரே நிலையில் தான் பல மணி நேரம் இருக்கும். நாளடைவில் உங்கள் உடல் இதற்கு பழக்கமாகி விடும்.

அதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை கொள்வது கடினமாகி விடும். அதிகமாக தூங்குவதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளில் ஒன்று தான் தலைவலி. அதிகமாக தூங்குவதால் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளில் தாக்கம் ஏற்படும்.

அதிகமாக தூங்குவதால் முக்கியமாக பாதிக்கப்பட போவது உங்கள் இதயமே. ஆய்வுகளின் படி, அளவுக்கு அதிகமான மணி நேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான இடர்பாடு அதிகம்.

காப்பகம்