Friday, August 22, 2014

மாயவிழி (2014) - திரைவிமர்சனம்

நாயகன் சஞ்சய் படித்து முடித்துவிட்டு, எந்த வேலையும் கிடைக்காததால் நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டு வருகிறார். இவர் பிரியா என்ற பெண்ணையும் காதலிக்கிறார். நாயகனுடைய அம்மா வேலை பார்க்கும் வீட்டு முதலாளியான இலக்கியா, தனது கணவன் மூலமாக முழு தாம்பத்ய சுகம் கிடைக்காத தவிப்பில் இருந்து வருகிறார்.

ஒருநாள் சஞ்சய்யை சந்திக்கும் இலக்கியா, அவன் தனது வீட்டு வேலைக்காரியின் மகன் என்பதை தெரிந்து கொள்கிறார். அவன்மீது மோகம் கொள்கிறாள். தனக்கு கிடைக்காத சுகத்தை அவன்மூலம் பெற்றுவிட துடிக்கிறாள். ஒருநாள் சஞ்சய்யின் அம்மா இலக்கியாவின் வீட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிடுகிறாள். அவளைப் பார்க்க சஞ்சய், இலக்கியா வீட்டிற்கு வருகிறான். அங்கு வந்ததும் அவனிடம் ஒரு செல்போனை கொடுத்து, ஏதாவது அவசர உதவி வேண்டும் என்றால் எனக்கு போன் செய் என்று சொல்கிறாள். அவனும் அந்த செல்போனை வாங்கிக் கொண்டு அம்மாவுடன் அங்கிருந்து புறப்படுகிறான்.

அன்றுமுதல், இலக்கியாவும், சஞ்சய்யும் போனில் பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் இலக்கியாவின் தோட்டத்து பங்களாவுக்கு போகும் சஞ்சய்யிடம் இலக்கியா தனது ஆசையை கூறுகிறாள். என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கும் ஆசை துளிர்விட, அவளது ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறான். அதையடுத்து, இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி தங்களது உறவை வளர்த்துக் கொள்கிறார்கள்.

இலக்கியாவுடன் கொண்ட உறவால், சஞ்சய்-பிரியா காதலில் சற்று விரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒருநாள் சஞ்சய்யும் இலக்கியாவும் உறவு கொண்டிருக்கும்போது இலக்கியாவின் கணவர் பார்த்துவிடுகிறார். நாயகனை தீர்த்துக்கட்டுவது என முடிவெடுக்கிறார் இலக்கியாவின் கணவர். இதற்கிடையில், சஞ்சய் காதலியான பிரியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கின்றனர்.

இறுதியில் சஞ்சய், இலக்கியாவின் கணவனால் கொல்லப்பட்டாரா? பிரியாவும்-சஞ்சய்யும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் இலக்கியாவின் நடிப்பு மட்டும்தான் மெச்சும்படியாக இருக்கிறது. கணவனுடனான தாம்பத்ய சுகம் கிடைக்காமல் தவிக்கும் தவிப்பில் ரசிகர்களை கிரங்கடிக்கிறார். அதேநேரத்தில், சஞ்சய்யுடன் உறவு கொள்ளும் காட்சிகளில் காம ரசத்தை அள்ளி தெளித்திருக்கிறார். படத்தில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. நாயகன் சஞ்சய் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். இவர் செய்யும் ஒவ்வொரு செய்கையும் நமக்கு காமெடியைத்தான் வரவழைக்கிறது.

சஞ்சய் காதலியாக வரும் பிரியா மற்றும் நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் ஏதோ படத்தில் வந்துவிட்டு போயிருக்கிறார்கள். படத்தில் இரண்டு கதை. இரண்டு கதையும் ஒன்றுகொன்று சம்பந்தம் கிடையாது. அப்புறம் எதற்கு இந்த இரண்டு கதை. இந்த மாதிரியெல்லாம் எடுத்து எதற்குத்தான் ரசிகர்களை குழப்புகிறார் என்று இயக்குனர் தமிழரசுவை கேள்வி கேட்க வைக்கிறது. படத்தில் முக்கால்வாசி காட்சிகளில் வசனங்களே இல்லை. ஒரு ஊமைப் படம் பார்த்த உணர்வே இருந்தது.

மது குடிப்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்று போட்டுக் கொள்ளலாம் என்பதற்காக படம் முழுக்க ஒரே சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது என வைத்து படத்தையே நாறடித்திருக்கிறார். இவர்போன்ற இயக்குனர்கள் இனி படங்களே எடுக்கக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்.

கணேஷ்ராஜா ஒளிப்பதிவு ஓரளவுக்கு பரவாயில்லை. படத்தில் வசனங்கள் இல்லாததால் சஞ்சீவ் குமாரின் இசையாவது படத்தை இழுத்துச் செல்லுமா? என்று பார்த்தால் அதுவும் மட்டமான ரகம்தான்.

மொத்தத்தில் ‘மாயவிழி’ மயக்கவில்லை.

0 comments:

Post a Comment

காப்பகம்