Friday, August 22, 2014

கபடம் (2014) - திரைவிமர்சனம்

நாயகன் விச்சு (சச்சின்) சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒருநாள் நண்பரை சந்திக்க கோவிலுக்கு போகும்போது அங்கு வரும் நாயகி பத்மினியை (அங்கனா ராய்) பார்க்கிறார். பட்டுச்சேலையில் அவளை பார்த்தவுடனேயே அவள்மீது காதல் வயப்படுகிறார். அவளுக்கு தெரியாமலேயே அவளது பெற்றோரிடம் திருமணம் பேசி முடிக்கிறார். அவர்களும் நிச்சயதார்த்த தேதியை குறித்துவிடுகின்றனர்.

யாரென்று தெரியாமலேயே அந்த நிச்சயதார்த்தத்துக்கு பத்மினியும் ஒத்துக் கொள்கிறார். நிச்சயதார்த்தத்தின் போது விச்சுவை பார்த்ததும் அவளுக்கு பிடித்துப் போய்விடுகிறது. 3 மாதங்கள் கழித்து திருமணம் வைத்துக்கொள்வதாக பெற்றோர்கள் முடிவெடுக்கின்றனர்.

முன்பின் அறிமுகமில்லாத பத்மினியிடம் எப்படி பேசுவது? எப்படி பழகுவது? என்று தெரியாமல் நாயகன் சற்று தடுமாறுகிறார். ஒருகட்டத்தில் அவளுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு காலை உணவு சாப்பிட வருமாறு அழைக்கிறான். அதன்படி அவளும் வருகிறாள்.

அங்கே, எதிர்பாராதவிதமாக விச்சுவின் அறையை பார்க்கிறாள். அந்த அறையில் விச்சு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஆங்காங்கே மாட்டி வைத்திருப்பதை பார்த்ததும் சற்று நெளிந்து போகிறாள். ஆனால், விச்சுவோ, பத்மினி அந்த புகைப்படங்களை பார்த்திருக்கமாட்டாள் என்று மனக்கணக்கு போடுகிறான்.

விச்சுவுக்கு தான் ஒரு நல்ல காதலியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் பத்மினி அவளுடன் நெருங்கி பழகுகிறாள். ஆனால், பத்மினியின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. இதை அவளிடம் வெளிப்படையாகவே கூறுகிறான். இதனால், விச்சுவுக்கும் பத்மினிக்கும் இடையே சிறு இடைவெளி உருவாகிறது. அடுத்தடுத்த சந்திப்புகளிலும் விச்சு மீது பத்மினிக்கு ஆசையைவிட வெறுப்பே அதிகமாக உருவாகிறது.

ஒருகட்டத்தில் பத்மினி இன்னொருவருடன் நெருக்கமாக பழகுவதாகவும், இருவரும் பைக்கில் ஊர் சுற்றுவதுமாக இருப்பதாக விச்சுவுக்கு அவனது நண்பர்களில் ஒருவன் கூறுகிறான். பத்மினியின் நடவடிக்கைகளும் அதுபோலவே இருப்பதால் அவள்மீது சந்தேகம் கொள்கிறான்.

ஒருநாள் ஊருக்கு கிளம்பும் பத்மினியை சந்திக்க வரும் விச்சு அவளை தனது காரில் அழைத்துச்சென்று பஸ்ஸில் ஏற்றிவிடுகிறான். பின்னர், அந்த பஸ்ஸை பின்தொடர்ந்து சென்று அவளை நோட்டமிடுகிறான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அவள் பாதி வழியிலேயே பஸ்ஸை நிறுத்தி, அருகிலுள்ள ஒரு லாட்ஜிற்கு சென்று தனது பெயரை மாற்றிக்கொடுத்து ரூம் எடுத்து தங்குகிறாள். அவளை பின்தொடர்ந்து சென்ற விச்சுவும் தனக்கு அவளது அறைக்கு எதிரில் உள்ள அறையில் தங்குகிறான்.

பத்மினி எதிர் அறையில் வேறு ஒருவனுடன்தான் இருக்கிறாள் என்று சந்தேகப்பட்டு, அவளை கொல்ல துடிக்கிறான். தனது நெருங்கிய நண்பன் சிவாவுக்கு போன் போட்டு இதை சொல்கிறான். பதிலுக்கு சிவாவோ அப்படி எதுவும் செய்துவிடாதே? நான் வருகிறேன் என்று சொல்கிறான். அவனுக்கு 20 நிமிடம் அவகாசம் கொடுத்துவிட்டு பத்மினிக்கு எதிர் அறையிலேயே தங்கியிருக்கிறான்.

விச்சு நினைத்த மாதிரியே எதிர் அறையில் பத்மினி வேறு ஒருவனுடன் நெருக்கமாக இருந்தாளா? விச்சு கொடுத்த 20 நிமிடத்திற்குள் சிவா வந்து அந்த கொலையை தடுத்தானா? இல்லை விச்சு, பத்மினியை கொலை செய்தானா? என்பதே மீதிக்கதை.

விச்சுவாக வரும் சச்சின் அழகாக இருப்பதோடு, நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். நிர்வாண புகைப்படங்களை தனது அறையில் வைத்து ரசிக்கும் இவரது கதாபாத்திரம், ஏன் தனக்கு நிச்சயமான பெண்ணுடன் நெருக்கமாக இருக்க பயப்படுகிறது என்பதுதான் புரியவில்லை. கடைசி காட்சிகளில் இவரது நடிப்பு அபாரம்.

பத்மினியாக வரும் அங்கனா ராய், மாடர்ன் உடையிலும், சேலையிலும் அழகாக பளிச்சிடுகிறார். சச்சினை மயக்க இவர் செய்யும் சேஷ்டைகளாகட்டும், பின் அவனை வெறுத்து ஒதுக்குவதாகட்டும் தெளிவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு லாட்ஜில் நடக்கும் கதை என்பதால் படத்தில் கதாபாத்திரங்கள் மிகக் குறைவுதான். சச்சின் நண்பனாக வரும் ஆதித்யா, லாட்ஜ் ஊழியராக வரும் காதல் சரவணன் உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, இதேபோல் நிறைய படங்கள் வந்துவிட்டன. அதையே தூசி தட்டி மறுபடியும் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோதி முருகன். முதல் பாதி சற்று போரடித்தாலும், இரண்டாம் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

சாஷி இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். பாடல் காட்சிகளில் இவரது உழைப்பு தெரிகிறது.

மொத்தத்தில் ‘கபடம்’ விறுவிறுப்பு

0 comments:

Post a Comment

காப்பகம்