Thursday, September 4, 2014

நீங்கள் தூங்கு முறையை வைத்து உறவின் வலிமையை கணிப்பிடலாம்..!

திருமணம் முடித்த தம்பதிகள், உங்கள் துணையுடன் தூங்கும் நிலையைக் கொண்டே உங்களுக்கும் துணைக்கும் இடையிலான உறவின் வலிமையை அறியலாம் என்கிறது ஓர் சுவாரஷ்யமான ஆய்வு.

 1100 தம்பதிகள் எப்படி வீட்டில் உறங்குகின்றார்கள் என்பதனை அவர்களிடம் கேட்டு அறிந்துஇ கட்டிலில் அவர்கள் இருவருக்குமிடையிலான தூரத்தை வைத்து உறவின் வலிமையை கணிப்பிட்டு இருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 பிரிட்டன் இணையம் ஒன்றே இக்கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

 எங்கே நீங்களும் விளக்கப் படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா... ராகவா லாரன்சின் புதிய முயற்சி..!

சில ஆண்டுகளுக்கு முன்பு கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஒரு வீடு இரு வாசல் என்ற படம் வெளியானது நினைவிருக்கலாம். ஒரே படத்துக்குள் இரு கதைகள் என்ற பாணியில் உருவாக்கப்பட்ட படம் அது.

அன்றைக்கு அது புதுமையான முயற்சியாக பார்க்கப்பட்டது. இப்போது அதைவிடப் புதுமையாக, ஒரு படத்துக்குள் இரு முழுமையான படங்களைக் காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘முனி' படத்தின் 3-ம் பாகமான ‘கங்கா' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் களமிறங்கியுள்ள இவர், இப்படத்தை தொடர்ந்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.

தன் படத்துக்கு 'ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா... ஒண்ணு கிழவன், ஒண்ணு கருப்பு துரை' என்று தலைப்பிட்டுள்ளார். அதாவது, இடைவேளை வரை ஒரு படமாகவும், இடைவேளைக்கு பிறகு இன்னொரு படமாகவும் இதை எடுக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களிலும் இவரே கதாநாயகனாக நடிக்கிறார். ‘கருப்புதுரை' படத்திற்கு ராய் லட்சுமி கதாநாயகியாக தேர்வாகியுள்ளார். ‘கிழவன்' படத்தில் நடிக்க ஆண்ட்ரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்படங்களின் பாடல்களையும், வசனத்தையும் கவிஞர் விவேகா எழுதுகிறார். இசையை லியோன் மற்றும் புதியவர் ஒருவரும் அமைக்கவிருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பை நேற்று செய்தியாளர்களை அழைத்து அறிவித்தார் ராகவா லாரன்ஸ். இந்த நிகழ்ச்சியில் நாயகி ராய் லட்சுமியும் பங்கேற்றார்.
இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஒரு சினிமாவை ஒரு டிக்கெட் எடுத்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஒரே டிக்கெட்டில் ரெண்டு சினிமாவை பார்க்கக்கூடிய நிலையை உருவாக்கித் தரப் போகிறார் ராகவா லாரன்ஸ்.

பெற்றோர்களே உஷார்... சீரியல்கள் உங்கள் வீட்டு ‘சிறுசுகளுக்கு’ என்ன சொல்லித் தருகின்றன..?

சினிமாவைப் போல் சீரியல்களுக்கும் சென்சார் தரச் சான்றிதழ் கொண்டு வரலாம் போல் இருக்கிறது. காரணம் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை சில சேனல்கள் ஒளிபரப்புவதால் தாய்மார்களோடு சேர்ந்து குழந்தைகளும் சமயங்களில் சீரியல் ரசிகர்களாகி விடுகிறார்கள்.

அவ்வாறு குழந்தைகளும் பார்க்கும் சீரியல்கள் அவர்களுக்கு நல்லறிவைப் போதிக்கிறதா எனக் கேட்டால் பெரும்பாலும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். தங்கள் முடிவு சரியானது தான், தாங்கள் நினைப்பது தான் சரி பெற்றோர்க்கு நம்மை விட அதிகமாக ஒன்றும் தெரியாது என்ற மனநிலையில் உள்ள வளரும் இளம்பருவத்தினர் இத்தகைய சீரியல்களால் வழி தவறிப் போகிறார்கள் என்றால் மறுப்பதற்கில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் மாணவி ஒருத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் தனது தந்தை இரண்டாவது மணம் முடித்தது தான் எனக் கூறப்படுகிறது. தந்தையின் மறுமணத்தால் மனமுடைந்த சிறுமிக்கு தற்கொலை முடிவைக் கற்றுத் தந்தது தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் தான் எனக் குற்றம் சாட்டுகிறார்கள் மனோதத்துவ மருத்துவர்கள்.

அவர்கள் கூற்றை இல்லையென புறந்தள்ள முடியாது. இதோ குழந்தைகளின் உலகம் என சில தொலைக்காட்சி சீரியல்கள் காட்டும் மோசமான காட்சிகள் உங்கள் பார்வைக்கு.

பிள்ளைநிலா...
பெரும்பாலான சீரியல்களில் குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறியவர்களாக பேச்சில் காணப்படுகின்றனர். அதிலும், மாலையில் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பிய நேரத்தில் ஒளிபரப்பப் படும் ‘பிள்ளை நிலா' சீரியலைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கேள்விப்பட்டவரை சமீபகாலமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த சீரியலைப் பார்க்க விடுவதில்லை. காரணம் அதில் வரும் சிறுவர்களின் கதாபாத்திர அமைப்பு.

தனக்கு நோய் எனத் தெரிந்த சிறுவன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனைத் தேடிச் செல்கிறாள் அவனது இளவயது. சிறுவன் அடைக்கலமாகும் இடத்தில் உள்ள சிறுமி, சிறுவனை புதை குழியில் தள்ளிக் கொல்ல முயற்சிக்கிறாள் என இப்படியாக செல்கிறது கதை.

இந்தச் சீரியல்களில் வரும் பெரியவர்கள் அனைவரும் குழந்தைகள் போல, குழந்தைகள் சொல்வதைக் கேட்டுத் தான் நடக்கிறார்கள். இந்தச் சீரியலைப் பார்க்கும் மற்ற குழந்தைகளுக்கு இதைப் போலவே தங்களது பெற்றோரும் தங்கள் சொல்பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் பதிய வாய்ப்பிருக்கிறது.

கல்யாணப்பரிசு...
இதேபோல், மதியம் ஒளிபரப்பாகும் கல்யாணப்பரிசு சீரியலில் நாயகன் தனது குழந்தைப் பருவக் கதையை எடுத்துக் கூறுகிறார். அதில், சித்தி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட தனது நண்பனுக்கு பெற்றோரை விட்டுப் பிரிகிறார் நாயகன்.

பெற்றோரைக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தான் அனாதை இல்லத்தில் சேர்ந்து, மூட்டைத் தூக்கி பிழைத்து கல்வி கற்று முன்னேறியதாக கூறுகிறார் நாயகன்.

இதன்மூலம் வீட்டை விட்டு வெளியேறினால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என தன்னைக் கொண்டு நாயகன் முன்னுதாரணம் கூறுவது போல் உள்ளது. இதற்குப் பதிலாக இவ்வாறு அவசரப்பட்டு வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என நாயகன் வருத்தப் படுவது போல் அக்காட்சியை அமைத்திருந்தால் சிறுவர்களுக்கு நிச்சய்ம் பாடமாக அமைந்திருக்கும்.

வாணிராணி...
இந்த வரிசையில் நிச்சயம் வாணிராணி சீரியலையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். பிள்ளை நிலாவில் நடித்து வரும் சிறுமி தான் இதிலும் நடிக்கிறார். எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றைப் பார்க்க நேரிடும் இச்சிறுமிக்கு கதைப்படி பேசும் திறன் தற்காலிகமாக நின்று விடுகிறது.

மனவருத்தத்தோடு பள்ளி செல்லும் சிறுமியை, சக மாணவி ஒருவர் சகட்டுமேனிக்கு கிண்டல் செய்கிறார். இது பாதிக்கப்பட்ட மாணவி பற்றி பார்வையாளர்களுக்கு பரிதாபத்தைக் கூட்டுவதற்காக வைக்கப்படும் காட்சி எனத் தெரிந்தாலும், அவரைக் கிண்டல் செய்யும் சகமாணவியும் அதே வயதுக்காரர் தான் என்பதை மறந்து விடக் கூடாது.

வில்லியாகக் காட்டப்படும் மாணவி வாய் பேச முடியாமல் தவிக்கும் மாணவியிடம் சென்று சகட்டு மேனிக்கு டயலாக் பேசுகிறார். அவரது தோரணையே ‘நாங்கெல்லாம் ரவுடியாக்கும்' என்பது போல் தான் உள்ளது.

நிஜ வாழ்க்கையில் இருப்பதைத் தான் படத்தில் காட்டுகிறார்கள் எனக் கூறிய காலங்கள் போய், இன்று படங்களைப் பார்த்துத் தான் சில பிஞ்சுகள் பழுத்து விடுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமி, கடத்தல் நாடகம் ஆடிய சிறுவர்கள், தனியாக பட்டணம் கிளம்பும் சிறுமிகள் ஆகியோரை மனதில் கொண்டாவது இது போன்ற காட்சிகளை வைக்கும் இயக்குநர்கள் இனி வரும் காலங்களில் மாறினால் வருங்கால சந்ததிக்கு நலம் பயக்கும்.

நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியானதற்கு நாங்கள் பொறுப்பல்ல...!

இணையத்தில் 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதற்கு தங்களை குற்றம்சாட்ட முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐ - கிளவுட் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் ஹேக்கர்களால் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஹாலிவுட் நட்சத்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரம் குறித்து அமெரிக்க புலனாய்வு மையத்தின் சைபர் பிரிவு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் பெரிய திரை கொண்ட மாடலான ஐபோஃன் 6-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், ஐ-கிளவுட் கணக்குகளிலிருந்து வெளியான ஹாலிவுட் நடிகைகளின் தனிப்பட்ட படங்கள் ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடி தருவதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் நடிகைகளின் தனிப்பட்ட படங்கள் வெளியானதற்கு தங்களை குற்றம்சாட்ட முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறிப்பிட்ட சில பிரபலங்களின் கணக்குகளின் பெயர், கடவுச்சொற்கள் மற்றும் பாதுகாப்பு கேள்விகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, தனிப்பட்ட விஷயங்களை இணையத்தில் வெளியானது உண்மைதான்.

ஆனால் இவை இணைய உலகில் மிகவும் சாதாரணமாகிவிட்டது. இந்த விதி மீறல்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-கிளவுட்' அல்லது 'பைஃன்ட் மை ஐ-போஃன்' அப்ளிகேஷன்கள் பொறுப்பாகாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறை காதிலிருந்து ரத்தம்; 2ஆம் முறை கை ஒடிந்தது: மிட்செல் ஜான்சனின் ஆக்ரோஷம்

ஆஷஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கிய போது ‘அவர் கையை உடை’ என்றார் மைக்கேல் கிளார்க். ஜான்சன் அதனை ஆண்டர்சனுக்குச் செய்தாரோ இல்லையோ தென் ஆப்பிரிக்காவின் மெக்லாரனுக்குச் செய்து விட்டார்.

செவ்வாயன்று ஆஸ்திரேலியாவிடம் தென் ஆப்பிரிக்க தோல்வி அடைந்த போட்டியின் போது மிட்செல் ஜான்சன் பவுன்சரில் முன்கையில் அடிபட்டு நூலிழை எலும்பு முறிவினால் மெக்லாரன் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சன் பவுன்சர் ஒன்றை வீச அதை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய மெக்லாரனின் ஹெல்மெட்டை பந்து தாக்க, ஹெல்மெட்டைக் கழற்றினால் காதிலிருந்து ரத்தம் கொட்டியது.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மெக்லாரன் அந்தத் தொடரை தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

இப்போது கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கிட்டத் தட்ட அதே பவுன்சர்தான், ஆனால் ஹராரே பிட்ச் அவ்வளவு வேகம் இல்லாததால் ஜான்சனின் பவுன்சர் அவர் முன்கையைப் பதம் பார்த்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் அவர் விளையாட முடியாது என்பதோடு அடுத்து எப்போது களமிறங்குவார் என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது.

வலது முன்கையில் அடிபட்ட அவர் தொடர்ந்து ஆடினாலும் பெவிலியன் சென்றவுடன் வலியால் துடித்துள்ளார். பிறகு ஸ்கேனில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அடுத்த 3 வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டியதுதான்.

பேட்டிங்கில் ஜான்சன் வர்ணனையாளர் அறைக் கண்ணாடியைப் பதம் பார்த்தார். ஜிம்பாப்வே வீரர் பன்யாங்கரா இவர் ஆஷஸ் தொடரில் வீசிய ஆக்ரோஷத்தைக் காண்பிக்கும் விதமாக ஜிம்பாப்பே வீரர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து கொண்டு அணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

மிட்செல் ஜான்சனின் திருவிளையாடல்களை நிறுத்தப்போகும் அந்த பேட்ஸ்மென் யார்? என்பதே இப்போதைய கேள்வி

நெற்றியில் விபூதி.. மடாதிபதியுடன் சந்திப்பு.. நாத்திகத்தை மறந்தாரா கமல்..?

பிரிக்கமுடியாத விஷயங்களில் ஒன்று கமல்ஹாசனும் சர்ச்சைகளும். வழக்கமாக கமலின் திரைப்படங்கள்தான் சர்ச்சைகளில் சிக்கும். ஆனால் இப்போது கமலின் ஒரு புகைப்படம்!

மலையாளத்தில் மோகன்லால்,மீனா நடிப்பில், ஜீது ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படம் ‘த்ரிஷ்யம்’. த்ரில்லர் படமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த இது, கமலின் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது

அண்மையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஜீயர் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயரை அவரது மடத்துக்கே சென்று கமல் சந்தித்ததுதான் இப்போது இணையதளங்களில் ஹாட் டாபிக்.

பகுத்தறிவு கருத்துக்களையும், நாத்திக சிந்தனைகளையும் பேசி வரும் கமல் நாங்குநேரி ஜீயரை சந்தித் திருப்பது குறித்து இணையதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்ள நாங்குநேரியில் வட்டமிட்டபோது...

நாங்குநேரி முழுக்க கமலின் ‘பாப நாசம்’ படத்தின் படப்பிடிப்பு நினைவில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. பேருந்து நிறுத்தத்தில், ஆட்டோ பயணத்தில், பாதசாரிகள் கூட்டத்தில், இப்படி மக்கள் அதிகமாக சந்தித்துக் கொள்ளும் இடங்களில் எல்லாம் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். “கமலு நல்ல எலுமிச்சம் பழ கலரு பாத்தியாடே!”, “என்னமா நடிக்கறாரு?” என்று நெல்லைச் சீமையின் மண் வாசனையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மற்றொரு தரப்பினர், “அன்பே சிவம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் அன்புதான் கடவுள் என்றும், தன்னை நாத்திகவாதி என்றும் காட்டிக் கொண்ட கமல் வான மாமலை மடத்தின் ஜீயரை ஏன் சந்திக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மரியாதை நிமித்தமான சந்திப்பு

இந்த சந்திப்பு குறித்து நாங்கு நேரியில் உள்ள வானமாமலை மடத்தின் 31வது ஜீயரான ஸ்ரீ மதுரகவி வான மாமலை ராமானுஜ ஜீயரிடம் கேட் டோம். “அவர் நடித்து வரும் படத்தின் ஆன்மீக காட்சி ஒன்றை நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் வைத்து எடுத்தார்கள். இந்த கோவில் மடத்தின் சொத்து என்பதால் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தார்.மொத்தம் 5 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் ஆன்மிகம் குறித்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.தொடர்ந்து மடத்தில் உள்ள பழங்கால பல்லக்குகள் போன்றவற்றையும் புகைப் படம் எடுத்து சென்றதாக மடத்தின் சிப்பந்திகள் தெரிவித்தனர்” என்றார் ஜீயர்.

உங்களுடனான சந்திப்புக்கு பின்பு அவர் ஆன்மிகப் பாதையில் திரும்ப வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது, “அவர் முகத்தோற்றமும், அதில் குடி கொண்டிருக்கும் அமைதியுமே இதற்கு பதில் சொல்லும்” என்று புதிர் போட்டு முடித்தார்.

இதற்கிடையே பாபநாசம் திரைப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், இந்த சந்திப்பு குறித்து தனது வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கின்றார். அதில், “வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்த போது நானும் அங்கிருந்தேன். நாங்குநேரி வானமா மலை ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப் பாட்டில் உள்ளது. அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரினோம். ஜீயர் அனுமதி அளித்தார்.அங்கு படப்பிடிப்பு நடந்த போது கமல் ஜீயரை சந்தித்து மரியாதை செலுத்தினார். அந்தப் புகைப்படம்தான் அது. நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என்பதாக நான் நினைக்கவில்லை.திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளாரை காண ஒருமுறை ஈ.வெ.ரா. சென்றார். திரும்பும் போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்து கொண்ட படமும் வெளியாகியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்..!

"நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம்" என்று நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்து வரும் 'நண்பேன்டா' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ராஜேஷின் உதவி இயக்குநர் ஜெகதீஷ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல், உதயநிதி தற்கொலை முயற்சி என செய்திகள் பரவியது. இதற்கு உதயநிதி தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், முதன்முறையாக இச்செய்திக்கு விளக்கம் அளித்து பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, "நான் மருத்துவமனைக்குப் போக நயன்தாராவும் ஒரு விதத்தில் காரணம்தான். ஆனால், அது தற்கொலை முயற்சி இல்லை.

'நண்பேன்டா' படத்தில் ஒரு ஃபைட் சீன். அதில் நயன்தாராவை நான் சுத்திவிட, அவர் வில்லனை அறைந்துவிட்டு திரும்ப வருகிற மாதிரி ஒரு காட்சி. ஆனால், நான் சுத்திவிட்டதும் என்னையே அவர் அடித்துவிட்டார். அவரது நகம் என் இடது கண்ணில் குத்தி ரத்தம் வழிந்தது.

அதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கட்டுப் போட்டு ரெஸ்ட் எடுக்கிற அளவுக்கு காயம். அதுதான் நயன்தாராவுக்கும் என் மருத்துவமனை விசிட்டுக்குமான தொடர்பு" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

காப்பகம்