Friday, September 26, 2014

ஜீவா (2014) - திரைவிமர்சனம்

ஜீவாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் என்றாலே அலாதி பிரியம். தாயை இழந்துவிட்ட ஜீவாவுக்கு தந்தை இருந்தாலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்பிரகாசம் (சார்லி) வீட்டிலேயே வளர்ந்து வருகிறார்.

தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு ஒருநாள் பள்ளி கிரிக்கெட் அணியில் விளையாட இடம் கிடைக்கிறது. பள்ளி கிரிக்கெட் அணியில் ஜீவாவின் திறமையைப் பார்த்த பீனிக்ஸ் கிளப்பின் கோச், அவனை தங்களது கிளப்பில் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார். ஆனால், அவனது அப்பா (மாரிமுத்து) இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்நிலையில் ஜீவாவின் பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவரும் ஜெனி (ஸ்ரீதிவ்யா) இவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். இவனும் அவளை காதலிக்கிறான். ஒருநாள் இவர்களுடைய காதல் ஜெனியின் அப்பா (டி.சிவா) வுக்கு தெரிந்துவிடுகிறது. இதனால் ஜெனியை வெளியூருக்கு சென்று படிக்க வைக்கிறார்.

அவளை பிரிந்த சோகத்தில் போதைக்கு அடிமையாகிறான் ஜீவா. அவனை போதையில் இருந்து மீட்டெடுக்க அவனுக்கு பிடித்த கிரிக்கெட் கிளப்பில் சென்று சேர்த்துவிடுகிறார் அவனது அப்பா.

அங்கு ரஞ்சித் (லஷ்மண்), டேவிட் (சூரி) இருவரும் இவருக்கு நண்பர்களாகிறார்கள். கஷ்டப்பட்டு திறமையை வெளிப்படுத்தும் ரஞ்சித்தும், ஜீவாவும் ரஞ்சி டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அங்கு நடக்கும் அரசியலால் இவர்களது திறமை முடக்கப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இதற்கிடையில், ஜெனி எங்கு படிக்கிறாள் என்பதை ஜீவா தேடிக் கண்டுபிடித்து, இருவரும் மீண்டும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள பெற்றோரிடம் சம்மதம் கேட்கிறார்கள். ஜெனியின் அப்பாவோ கிரிக்கெட்டை விட்டு வந்தால் அவளை திருமணம் செய்துகொடுப்பதாக கூறுகிறார்.

இறுதியில், ஜீவா கிரிக்கெட்டில் சாதனை படைத்தாரா? கிரிக்கெட்டை தியாகம் செய்து ஜெனியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஜீவாவாக வரும் விஷ்ணு, உண்மையான கிரிக்கெட் விளையாட்டு வீரருக்குண்டான தோற்றத்தை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் இவர் காட்டும் ஸ்டைல் எல்லோரையும் ரசிக்க வைக்கிறது.

இதுவரையிலான படங்களில் மீசை, தாடியுடன் பார்த்து ரசித்த விஷ்ணுவை, இப்படத்தில் பள்ளி சிறுவனாக காட்டுவதற்காக மீசையில்லாமல் காட்டியிருப்பதைத்தான் ரசிக்க முடியவில்லை.

ஜெனியாக வரும் ஸ்ரீதிவ்யா, குறும்புத்தனமான பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். படம் முழுக்க குட்டைப் பாவடையுடன் வலம்வந்தாலும் அதிக கவர்ச்சி இல்லாமல் நடித்து அனைத்து தரப்பினரையும் கவர்கிறார். கல்லூரி மாணவியாக வரும்போது பொறுப்பான பெண்ணாக அனைவர் மனதில் இடம்பிடிக்கிறார்.

ஜீவாவின் நண்பன் ரஞ்சித் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லஷ்மணுக்கு அழகான கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி, அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார் லஷ்மண். கிரிக்கெட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு, அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட நேரத்தில் இவர் முகத்தில் காட்டும் உணர்ச்சி நம்மையே கலங்க வைக்கிறது.

சூரியின் காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை. ஒருசில காட்சிகள் சிரிக்க முடிகிறதே தவிர, பெரும்பாலான காட்சிகள் போரடிக்கத்தான் வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டியிருக்கும் சார்லிக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை திறம்பட நடித்து கைதட்டல் பெறுகிறார்.

விஷ்ணுவின் அப்பாவாக வரும் மாரிமுத்து, கோச் ரவி, ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் டி.சிவா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

விளையாட்டை கதைக்களமாக கொண்ட படம் என்றாலே சுசீந்திரனுக்கு லட்டு சாப்பிடுகிற மாதிரி. கபடியை மையப்படுத்தி எடுத்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சுசீந்திரன், ஜீவா படத்தின் மூலம் உச்சம் தொட்டுவிட்டார்.

கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது. திறமையானவர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படியெல்லாம் சிதறடிக்கப்படுகிறது என்பதை தைரியமாக எடுத்துக் காட்டிய இயக்குனருக்கு சபாஷ்.

மதியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். மைதானத்தில் வீரர்களுடன் இவருடைய கேமராவும் இறங்கி விளையாடியிருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஜீவா’வில் ஜீவன் உண்டு.

காப்பகம்