Saturday, February 1, 2014

ஆம் ஆத்மி வெளியிட்ட ‘ஊழல்வாதிகள்’ பட்டியலில் சிதம்பரம், வாசன், அழகிரி, கனிமொழி, ராசா..!



ஆம் ஆத்மியின் நிறுவனத் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று டெல்லியில் ‘ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு  எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும் நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் பங்கேற்ற தேசிய கவுன்சில் கூட்டத்தில் ஊழல் அரசியல்வாதிகள்’ பட்டியலை வெளியிட்ட கேஜ்ரிவால் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.இந்தப் பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுகவைச் சேர்ந்த மு.க.அழகிரி, கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் கேஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகள் பட்டியலில் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, சுரேஷ் கல்மாடி, நிதின் கட்காரி, ஜி.கே.வாசன், சுஷில் குமார் ஷிண்டே, பிரஃபுல் படேல், எடியூரப்பா, ஆனந்த் குமார், வீரப்ப மொய்லி, குமாரசாமி, ப.சிதம்பரம், அழகிரி, கனிமொழி, சல்மான் குர்ஷித், அன்னு தாண்டன், ஆ.ராசா, தருண் கோகாய், கபில் சிபல், மாயாவதி, முலாயம் சிங், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், பவன் பன்சால், ஃபரூக் அப்துல்லா மற்றும் நவீன் ஜிண்டால்.-ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்

இந்தப் பட்டியலை வெளியிட்டு பேசிய கெஜ்ரிவால், “நான் நாட்டில் உள்ள நேர்மையற்றவர்கள் (அரசியல்வாதிகள்) பட்டியலை தயாரித்துள்ளேன். இந்தப் பட்டியலில் நேர்மையான அரசியல்வாதிகள் எவரேனும் இருந்தால், தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள்.இந்தப் பட்டியலில் உள்ளவர்களை தோற்கடிக்கச் செய்வதா அல்லது நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதா என்பதை நாட்டு மக்களிடமே கேட்கிறேன்.

நான் தொடங்கிவைத்துள்ள இந்தப் பட்டியல் போலவே நீங்களும் (ஆம் ஆத்மி தொண்டர்கள்) தயாரிக்கலாம். அதனை கட்சியிடம் அளியுங்கள்.எங்களுடைய நோக்கம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல; பாஜக, காங்கிரஸ் போன்றவர்களுக்கு எதிராக அரசியல் செய்வதும் அல்ல. ஊழல்வாதிகளை நாடாளுமன்றத்துக்குள் அனுப்பக் கூடாது என்பதே எங்களது நோக்கம்” என்றார் அரவிந்த் கேஜ்ரிவால்.

குறிப்பாக, தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்காக ரூ.500 கோடி செலவு செய்யும் இவர்கள் (மோடி, ராகுல்) நேர்மையான அரசைத் தரக்கூடியவர்களா? இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்மிடம் இருந்து பணத்தை மீட்டுக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

ராமனின் விளைவை பயன்படுத்தி மனித மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்த முயற்சி..!



மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

 குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

கணவருக்கு பிடித்த நடிகை போல மாறிய மனைவிக்கு நேர்ந்த கதி..!



சவுதி அரேபியாவில், தனது கணவருக்கு பிடித்த ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி, அதையடுத்து முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட மனைவியை கணவர் விவகாரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டது அந்நாட்டு ஊடகங்களின் பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பெயர் வெளியிடப்படாத அந்தப் பெண்ணின் கணவர், பிரபல ஹாலிவுட் நடிகை கிம் கர்டஷியானின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்துள்ளார். அவர் நடித்த படங்களை தொடர்ந்து வீடியோவில் போட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து வந்த கணவனின் போக்கை மாற்ற அவரது மனைவி ஒரு முடிவெடுத்தார்.அதன் படி முதலில், நடிகை கிம் கர்டஷியான் பாணியில் சிகையலங்காரம் செய்துக் கொண்டார்.

நடிகையின் மீது தனது கணவனுக்கு உள்ள ஈர்ப்பு தன் மீது இல்லாமல் போனதை அறிந்து வேதனைப்பட்ட அந்த பெண், சவுதியின் பிரபல ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ நிபுணரிடம் சென்று தனது முக அமைப்பையும் கிம் கர்டஷியானைப் போலவே மாற்றிக் கொண்டார்.

‘நடிகையை மறந்துவிட்டு இனி நம் மீது மட்டும் கணவர் பூரணமாக அன்பு செலுத்துவார்’ என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பிய அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் செய்கையும் (புதிய) முக அமைப்பும் தனக்கு பிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அவரை விவாகரத்து செய்துவிட்ட கணவன் இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட’ அவரது வாழ்க்கை ஊடகங்களின் விவாதப் பொருளாகவும் மாறிவிட்டதை எண்ணி பல சவுதி பெண்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்



தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார்.

 தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார்.

 ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார்.

 இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர்.

தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!

‘இங்க என்ன சொல்லுது’ – திரை விமர்சனம்..!



திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போதெல்லாம் அரிதான ஒன்றாகி விட்டது.இந்த சூழ்நிலையில்,இதுபோன்ற திரைப் படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை எனறே கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள்.பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும்.வேறென்ன சொல்ல?

இனி பார்த்துத் தொலைத்த படத்தின் கதையைப் பார்ப்போம்:கோத்தகிரியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் விடிவி கணேஷ் தனது வாழ்க்கையை கார் டிரைவரான சந்தானத்துடன் கூறுவதுபோன்ற காட்சியுடன் படம் நகர்கிறது. சிம்புவும், விடிவி கணேஷும் அண்ணன் தம்பிகள். ஒருநாள் இரவில் இருவரும் வந்து கொண்டிருக்கும்போது வழியில் மீரா ஜாஸ்மினிடம் ரகளை செய்யும் சிலபேரிடமிருந்து அவரை மீட்கிறார்கள்.

இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்படுகிறது.
ஒருநாள் மீரா ஜாஸ்மின் தன்னுடைய பிறந்த நாளுக்கு கணேசையும், சிம்புவையும் அழைக்கிறார். அங்கு போகும் சிம்பு, மீரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த வைர மோதிரத்தை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதை இன்முகத்துடன் வாங்கிக் கொள்ளும் மீரா ஜாஸ்மினுக்கு சிம்புவின் மீது காதல் வருகிறது. அதை அவரிடமே தெரிவிக்கிறார் மீரா ஜாஸ்மின்.

ஆனால், சிம்புவுக்கோ ஏற்கெனவே ஆண்ட்ரியாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் மீரா ஜாஸ்மின் தன்னிடம் காதல் கூறியதும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கணேஷிடம் சொல்லி, தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அவளிடம் கூறச் சொல்கிறார். ஒருநாள் தன்னை எப்பொழுது கல்யாணம் செய்துக்கொள்ளப் போகிறாய் என்று சிம்புவுக்கு மீரா ஜாஸ்மின் மெசேஜ் அனுப்புகிறார். அதை, சிம்புவின் வீட்டிற்கு வந்திருக்கும் ஆண்ட்ரியா பார்த்துவிடுகிறார். உடனே பதிலுக்கு மீரா ஜாஸ்மினுக்கு போன் செய்து அவரை திட்டிவிடுகிறார்.

ஏதும் அறியாத மீரா ஜாஸ்மின் கணேஷிடம் அவள் யார் என்று கேட்க, அவள்தான் சிம்புவை திருமணம் செய்துகொள்ளப் போகிறவள் என்பதை மீரா ஜாஸ்மினிடம் விளக்கிவிட்டு போனைத் துண்டித்துவிட்டுகிறார். மறுநாள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கணேஷுக்கு போன் வருகிறது. தன்னை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறிவிட்டு, தற்போது மறுப்பதாக மீரா ஜாஸ்மின் கணேஷ் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறியுள்ளார். போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் கணேஷ், அவளை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அங்கிருந்து அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் கணேஷின் நெருங்கிய உறவினரான மயில்சாமி அவரை பார்க்க வருகிறார். இருவரும் சேர்ந்து ஒரு சினிமாப் படம் எடுக்க முடிவெடுக்கின்றனர். இதற்காக மீரா ஜாஸ்மினின் வீட்டை விற்கின்றனர். ஆனால், அந்த பணத்தை சினிமாவில் போடாமல் ரேஸில் போட்டு பணத்தையெல்லாம் விட்டுவிடுகின்றனர்.
இறுதியில் கணேஷ், திருந்தி மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? அவரது வாழ்க்கை என்னவாயிற்று? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகன் விடிவி கணேஷ். தான் கதாநாயகன் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். தன்னுடைய குரலையே பலமாக நம்பி, கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில் தனக்குத்தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

சிம்பு படத்தில் கால் மணி நேரம்தான் வருகிறார். இவரும் ஆண்ட்ரியாவும் காட்டும் நெருக்கும் நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இருந்தாலும் ஓகே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலைகாட்டியிருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு வெயிட்டான கதாபாத்திரம். ஆனால், கணேஷுக்கு ஜோடியாக நடிக்க எப்படித்தான் முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. இருவரும் கணவன்-மனைவியாக இருந்தாலும் படத்தில் இருவரும் நெருங்கி நடிக்கும் காட்சிகள் எதுவுமே இல்லை. இவரே கணேஷிடம் அவ்வாறெல்லாம் நடிக்க முடியாது என்று கூறியிருப்பார் போலும்.

சந்தானம் இந்த படத்தில் கடவுளின் அவதாரம் போல் வருகிறார். ஒரு சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். வழக்கம்போல் விடிவி கணேஷை கலாய்க்கும் காட்சிகள் அருமை. தரண் இசையில் ஒரு பாடல் கூட கேட்கும்படியாக இல்லை என்றே சொல்லலாம். ‘போடா போடி’ படத்திற்கு இசையமைத்தவர் இவரா என்று கேட்க தோன்றுகிறது. பின்னணி இசையும் படம் முழுக்க ஒரே மாதிரி உள்ளது.

இதற்கிடையில் ஆர்ம்பத்திலேயே சொன்னது மாதிரி திரைப்படங்கள் வெற்றியடைவது என்பது இப்போது அபரிதமான ஒன்று. இந்த சூழ்நிலையில், இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவது ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவதற்கு போடப்படும் முட்டுக்கட்டை என கூறலாம். படம் ஆரம்பித்து 20 நிமிடத்திலேயே ரசிகர்கள் தங்களின் பொறுமையை இழந்து புலம்ப ஆரம்பிக்கிறார்கள். பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைத்துவிட்டால் படம் எடுத்துவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ரசிகர்களின் நிலைமையையும் புரிந்து படம் எடுக்கவேண்டும். திரையில் நடப்பதைதான் விமர்சனமாக சொல்லப்படும். ஆனால், இந்த படத்தை பொறுத்தவரை தியேட்டருக்கு உள்ளே நடப்பதையே விமர்சனமாக சொல்லலாம்.

மொத்தத்தில் ‘இங்க என்ன சொல்லுது’ சொல்ற மாதிரி இல்ல.

காப்பகம்