Wednesday, August 20, 2014

'கத்தி' படத்தை திரையிட விட மாட்டோம் - 65 அமைப்புகள் அறிவிப்பு

'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என 65 அமைப்புகள் இன்று சென்னையில் அறிவித்தது.

தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' படங்களை திரையிட விட மாட்டோம் என்ற அறிவித்தார்கள்.

'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய படங்களை ஏன் எதிர்க்கிறோம் என்று கூட்டாக அறிக்கை ஒன்றிணை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் கூறியிருப்பது..

'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் போராளியாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. மேலும், இலங்கை எதிராக பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் திரையுலகில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

ராஜபக்சேவிற்கு மிகவும் நெருக்கம் கொண்டவர் தான் சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் அறியும். முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை யாராலும் ஏற்க முடியாது. ராஜபக்சேவுடன் யார் கை குலுக்கினாலும் மன்னிக்க முடியாது. இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே! சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

காப்பகம்