Friday, October 3, 2014

‘திருமணத்தில் தொடங்கிய கொடுமை கொலையில் முடிந்துவிட்டதே’ - அம்மா கதறல்

‘திருமணம் ஆனதில் இருந்தே எனது மகளை கொடுமைப்படுத்தி, இப்போது கொலையும் செய்துவிட்டனரே’ என்று தாய் புஷ்பலதா மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

தாய் கதறல் கொலை செய்யப்பட்ட ஜெயசுவாசினியின் தாய் புஷ்பலதா, தந்தை சண்முகம், சகோதரர் மோகன்ராம் மற்றும் உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயசுவாசினியின் உடலை பார்த்து கதறி துடித்தனர். அப்போது புஷ்பலதா கூறியதாவது:– ஏராளமான நகைகளை வரதட்சணையாக கொடுத்து கடந்த 2007–ம் ஆண்டு ஒரே ஆசை மகளை திருமணம் செய்து வைத்தோம். கோவை அவினாசிரோட்டில் உள்ள பெரிய மண்டபத்தில் ரூ.30 லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்தோம். அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் இந்த திருமணத்துக்கு வந்து இருந்தனர்.

திருமணம் ஆன புதிதில் இருந்தே எனது மகளை கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர். அனைத்து பொருட்களையும் நாங்களே வாங்கி கொடுத்தோம். இரட்டைக்குழந்தை பிறந்த பின்னர் மகளை திரும்ப அனுப்பி வைக்கலாம் என்று கணவர் வீட்டாரிடம் கேட்டபோது, ‘ஜாதகம் சரியில்லை. இப்போது வர வேண்டாம்’ என்று தொடர்ந்து நாள் கடத்தி வந்தனர். குடும்பம் நடத்த வருமாறு அழைத்து, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து கேட்டு இப்போது கொலையும் செய்துவிட்டனர். திருமணத்தில் தொடங்கிய கொடுமை, கொலையில் முடிந்து ஒரே மகளை இழந்துவிட்டேன். எனது மகளுக்கு நேர்ந்த கொடுமைபோல் வேறு எந்த பெண்ணுக்கும் இனி நடக்க கூடாது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்று கொடுக்க வேண்டும்.

இவ்வாறு புஷ்பலதா கண்ணீரும், கம்பலையுமாக கூறினார்.

ஜெயசுவாசினியின் சகோதரர் மோகன்ராம் கூறியதாவது:– கணவர் வீட்டார் கட்டாயப்படுத்தியதால் திருமணத்தை தடபுடலாக நடத்தினோம். ஆனால் திருமணம் முடிந்ததில் இருந்தே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். கடந்த 2007–ம் ஆண்டு ரெனால்டு கம்பெனி கார் பிரசித்தி பெற்று இருப்பதாகவும், கோவையின் சாலையில் முதன்முதலில் இந்த காரை ஓட்ட விரும்புவதாகவும், அந்த காரை வாங்கி தருமாறும் சந்தோஷ்குமார் கேட்டார். எங்கள் அக்காள் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் செலவில் அந்த காரையும் வாங்கி கொடுத்தோம். ஜட்டி முதல் அனைத்தையும் கணவர் வீட்டினருக்கு வாங்கி கொடுத்தும், எங்களது குடும்ப குல விளக்கை கொன்றுவிட்டனர் என்று அண்ணன் மோகன் ராம் கண்ணீர் வடித்தபடி கூறினார்.

1 comments:

  1. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete

காப்பகம்