Monday, August 18, 2014

திரையரங்கில் தேம்பி அழுத தருணம் - இயக்குநர் பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு

'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில், பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'. ஆர்யா, விஷால், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) அன்று வெளியான இப்படம் விமர்சகர்கள், ரசிகரக்ள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தனது படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை திரையரங்கு சென்று பார்த்த இயக்குநர் பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், "சத்தியமாக இவ்வவு பெரிய வெற்றி காண.. காத்திருந்த காலத்தின் எடை, கண்களை அழுத்த சுமை தாளாமல் கீழிமை கிழிந்து, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் முதல் காட்சி போல் என்னை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போட்டது. கைதட்டல் விசிலில் அரங்கம் அதிரும் போது சின்னப் பிள்ளையாய் தேம்பியது, யாருக்கும் தெரிந்துவிடாதிருக்க ஏற்கனவே நனைந்த கைகுட்டையும் கைவிரித்தது. அந்நேரமும் என் மானம் காக்க கீர்த்தனா தான் வந்தார். கட்டிப் பிடித்து அவர் கன்னம் நிறைத்து நனைத்தேன்.

நினைக்கலாம் நீங்கள்.. அப்படியென்னா? பொல்லாத பொடலங்கா படம் என்று. கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒரு new wave பிலிம். முற்றிலும் புது முயற்சி. ரசிகர்களின் ரசனை மற்றும் புத்திசாலித்தனத்தை மட்டும் நம்பி, முதன்முறையாக ரசிகனுக்கும் திரைக்குமான இடைவெளியை வெகுவாக விலக்கி எடுக்கப்பட்ட படம். இவ்வெற்றி எனதல்ல நமது!

தயவு செய்து (திருட்டு VDC போன்ற) களவு முறைகளை கையாளமால் திரையில் பார்த்து என்னை இன்னும் உயரம் அழைத்து சொல்லுங்கள்.. நன்றி" என்று குறிப்பிட்டு இருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

இயக்குநர் பார்த்திபனின் இந்த நிலைத்தகவல் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட விருப்பங்களைக் குவித்தது கவனிக்கத்தக்கது.

0 comments:

Post a Comment

காப்பகம்