Sunday, January 19, 2014

“கே.பாக்யராஜ் ஊசி போடுவதில் கில்லாடி…” - மன்சூர் அலிகான்



ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் ’3 ஜி’ எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’.

இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா,  மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி .

இந்த 3 ஜீனியஸஸ் எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.

நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. ‘என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க…’ என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை, நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்குப் பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது..? அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்…” இவ்வாறு பேசினார்.

நடிகர்  மன்சூர் அலிகான் பேசும்போது “இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார். கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது. எங்க ஊர் பக்கத்திலிருந்தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

0 comments:

Post a Comment

காப்பகம்