Thursday, November 28, 2013

பெரிய நம்பிக்கை.........!

உலகில் பெரிய காரியங்களைச் செய்தவர்கள் எல்லோருமே தங்களுடைய நம்பிக்கையை சிறிய செயல்களில் செலுத்தி வீணாக்கி விடவில்லை.

இதற்கு மாறாக நம்பிக்கையை பெரிய செயலில் செலவிடுவதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்து, அதற் காக ஓயாது பாடுபட்டு முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ஜான் பயர்டு என்பவர் தான் டி.வி.யைக் கண்டு பிடித்தார். அவருடைய நம்பிக்கை எவ்வளவு பெரியதாகவும், அளவு கடந்ததாகவும் இருந்தது என்பதனை உணர்ந்து கொண்டாலே போதும்.

நம்முடைய நம்பிக்கையை எதில் வைத்து எப்படி செயல்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

ஜான் பயர்டின் இளமைப் பருவத்திலே பொறிகளை உருவாக்க வேண்டும் என்றஎண்ணம் இருந்தது. இந்த எண்ணத்தினால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து மின் இயல் கல்வியைக் கற்றார்.

பின்பு ஒரு தொழிற்சாலையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றினார். அதன் பின்பு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் கால் உறையை தயாரித்தார்.

அத்துடன் காலணிகளுக்கான மையும் உற்பத்தி செய்தார். ஆனாலும் அவற்றில் லாபம் கிடைக்கவில்லை. கடுமையான உழைப்பின் பயனாக உடல் தளர்வுற்று நோய் ஏற்பட்டது.

உடல்நலம் நன்றானதும் மறுபடியும் பழச்சாறு செய்யும் தொழிலை மேற்கொண்டார். அதிலும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இனிமேல் தொழில் தொடங்க வேண்டாம் என்றமுடிவில் சில கம்பெனிகளிடம் பணிபுரிந்தார். போதுமான வருவாய் கிடைக்கவில்லை.

அதன் பிறகு எப்படியும் டி.வி.யை கண்டு பிடிக்க வேண்டும் என்று விடாப் பிடியாகச் செயல்பட நம்பிக்கையுடன் ஆரம்பித்தார்.

தேநீர் தயாரிக்கும் ஒரு பாத்திரமும் ஒரு தகர டப்பாவுமே ஆய்வுக்கருவி களாக அமைத்து ஆராய்ச் சியைத் தொடங்கினார்.

இரவு பகலாக ஆராய்ந்தார். எண்ணற்ற இடுக்கண்களையும் ஏமாற்றங்களையும் தோல்வி களையும் தாங்கிக் கொண்டார்.

வெற்றி பெற்றே தீருவது என்றதிடமான நம்பிக்கை யோடு ஆண்டு கணக்கில் ஆராய்ச்சி தொடர்ந்து நடத்தினார்.

இந்தச் சமயத்தில் அவருக்குப் பணம் தேவைப் பட்டது. பலரிடம் உதவி கேட்டார். இவருடைய வெற்றி யில் நம்பிக்கை வைத்து எவரும் பணம் தர முன்வரவில்லை.

ஆனால் அவருக்கோ தன்னுடைய ஆராய்ச்சியில் முழுமையான நம்பிக்கை இருந்தது பசியோடும் பட்டினி யோடும் வேலை செய்தார். இன்னல்களை எல்லாம் பொறுத்துக் கொண்டார்.

தன் முன்னே வைத்து ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த பொம்மையின் உருவம் மங்கலாகத் திரையில் விழுந்ததும் அவருக்கு எற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பொம்மையை வைத்து ஆராய்ச்சி நடத்தி வெற்றி கண்ட அவர் மனிதனையும் முன்னே நிறுத்தி ஆராய்ச்சியில் வெற்றி காண வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.

உடனே செயல்பட ஆரம்பித்து மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி கண்ணில் பட்ட சிறுவனை அழைத்து பொம்மை இருந்த இடத்தில் சிறுவனை நிறுத்தினார்.

கருவிகளை இயக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! சிறுவனின் உருவம் கருவியில் தெளிவாகத் தென்பட்டது.

பயர்டு டி.வி.யை கண்டு பிடித்து விட்டார். பெரிய அளவில் நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றியும் பெற்றார்.

நாமும் இவரைப் போன்று ஏன் பெரிய நம்பிக்கை வைத்துச் செயல்பட்டு வெற்றி பெறக் கூடாது? அவரைப் போன்ற ஆற்றலும் திறமையும் நம்மிடமும் உள்ளது அல்லவா! பின்பு ஏன் செயல்படாமல் சும்மா இருக்க வேண்டும் ?

நாமும் பெரிய நம்பிக்கையை வைத்துச் செயல்பட ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். இதில் சந்தேகமே இல்லை. நாமும் இன்று முதல் பெரிய நம்பிக்கை வைத்து செயல்படுவோம். வெற்றிகளை குவிப்போம்.

1 comments:

காப்பகம்